Monday, May 31, 2010

சாதியமைப்பிற்கு சவால் விடுத்த மாநாடு!


தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு வெற்றி மாநாடாக மட்டுமல்ல, எழுச்சி மாநாடாகவும் அமைந்தது. முடிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளில் மிகப்பெரும்பான்மையாக 420 பேர் கலந்து கொண்டனர். இதில் தலித் பழங்குடியினர் 70 சதவிகிதம், இதர பிரிவினர் 30 சதவிகிதம் என்பது நம்பிக்கையளிக்கக்கூடிய நல்ல கலவையாகும். தலித் மக்களின் பல்வேறு உட்பிரிவைச் சேர்ந்தவர்களும், அதில் செயல்படும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் மாநாட்டில் பங்கேற்றனர். மொத்த பிரதிநிதிகளில் 20 சதவிகிதம் (85 பேர்) அருந்ததியர் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதும், தலித் கிறிஸ்தவர் பிரதிநிதிகளும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் இடம் பெற்றிருந்த வர்க்க வெகுஜன அமைப்புகளிலிருந்தும் தலித் அமைப்புகளிலிருந்தும் முழு அளவில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இது இந்த அமைப்பின் விரிந்து பரந்த ஜனநாயகத் தன்மையை மட்டுமல்ல, இதன் மூன்றாண்டு கால ஒருங்கிணைந்த வெற்றிப் பயணத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.


கருத்தொற்றுமை


மாநாட்டில் முன்வைக்கப்பட்ட இயக்க வேலை அறிக்கைக்கு பொதுவான ஏற்பு இருந்தது. விவாதத்தில் 44 பேர் பங்கேற்றுப் பேசினார்கள். ஒருவர் கூட முரண்பட்டுப் பேசவில்லை. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நோக்கம், இயக்க கட்டமைப்பு, நடத்தப்பட்ட போராட்டங்கள் மற்றும் அவை குறித்த மதிப்பீடு போன்ற எல்லா அம்சங்களிலும் கருத்தொற்றுமை காண முடிந்தது. தீண்டாமை ஒழிப்பு உடனடிப்பணி என்றாலும், சாதியமைப்பைத் தகர்ப்பதே பிரதான குறிக்கோள். அப்பார்வையோடுதான் களப்போராட்டங்களையும், இயக்கங்களையும் நடத்த வேண்டும். இதுவே பொதுப் பார்வையாக இருந்தது.


பிரகாஷ் காரத் உரை


மாநாட்டில் தோழர் பிரகாஷ் காரத் பங்கேற்றது உத்வேகமூட்டும் நிகழ்வாக இருந்தது. பிரதிநிதிகள் பலரின் விவாதங்களை அவர் நேராகக் கேட்டார். மாநாட்டில் அவர் ஆற்றிய உரை பிரதிநிதிகளின் ஏகோபித்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நடவடிக்கைகள் தமிழ்நாட்டிற்கு அப்பால் பிற பகுதிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், ஒடுக்கப் பட்ட மக்களின் விடுதலைக்காகவும், இயக் கங்களை நடத்த அவர்களுக்கு உத்வேகம் தந்துள்ளது... “காரல் மார்க்ஸ் புரட்சி என்று சொல்லும் போது அதை பொருளாதாரப் புரட்சி என்றோ அரசியல் புரட்சி என்றோ சொல்ல வில்லை. அவர் எப்போதும் சமூகப் புரட்சி என்றே கூறுவார். இந்தியாவில் சாதி ஒடுக்கு முறைகளை ஒழிக்காமல் புரட்சி சாத்தியமல்ல. கம்யூனிஸ்டுகள் சமூகப் புரட்சியில் நம்பிக்கை கொண்டிருப்பது உண்மையானால், அனைத்து சமூக மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்த போராட்டத்தில் முன் நிற்கிறோம் என்பதை நடைமுறையில் எடுத்துக் காட்ட வேண்டும்” என்ற அவரது வார்த்தைகள் பிரதிநிதிகள் மனதில் நம்பிக் கையை விதைத்தது.


மாநாட்டு அறைகூவல்


மாநாட்டில் தீண்டாமை ஒழிப்பு மற்றும் தலித் மக்களின் சமூகப் பொருளாதார நிலைபாடு பற்றிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உடனடி நடவடிக்கைகளுக்கான சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்று, சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தனார் நடந்து வந்த வாசல் அடைக்கப் பட்டிருப்பது பற்றியதாகும். அந்த வாசலைப் பயன்படுத்தக்கூடாது என்ற நோக்குடன் சுவர் எழுப்பி அடைக்கப்பட்டுள்ளது. இது தீண்டாமைச் செயலாகும். அக்காலத்தில் ஆதிக்க சக்திகள் எழுப்பிய சுவரை இன்றளவும் பாதுகாப்பது தீண்டாமையைப் பாதுகாப்பதாகும். எனவே அந்தச் சுவரை தமிழக அரசு தலையீடு செய்து அகற்ற வேண்டும் எனவும், அவ்வாறு அகற்றப்படாவிட்டால் ஜனநாயக சக்திகள், ஒடுக்கப்பட்ட மக்களை அணி திரட்டி அச்சுவரை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட நேரடி நடவடிக்கைகளுக்கும் செல்ல மாநாடு அறைகூவல் விடுத்தது. உத்தப்புரத்தில் நிழற்குடை அமைப்பது உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக தோழர் டி.கே. ரங்கராஜன் எம்.பி. தலைமையில் சாலை மறியலில் ஈடுபடுவதென மாநாடு தீர்மானித்தது. அருந்ததியர் மக்களின் தீர்வு காணப்படாத பிரச்சனைகள், தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப் பட்டோர் பட்டியலில் சேர்ப்பது, மிகவும் ஒடுக் கப்பட்ட நிலையில் உள்ள புதிரை வண்ணார் மக்களின் பிரச்சனைகள் ஆகிய கோரிக்கைகளுக்காக உடனடி இயக்கங்கள் நடத்த முடிவாகியது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரகடனமும் பிரதிநிதிகள் மேற்கொண்ட உறுதிமொழியும் எதிர்கால இயக்கத்திற்கு திசைவழிகாட்டின.


பேரணி - பொதுக்கூட்டம்


நிறைவாக நடைபெற்ற மாநாட்டுப் பேரணி பார்ப்போரின் கவனத்தை ஈர்த்தது. பல்லாயிரம் பேர் பங்கேற்றனர். இளைஞர்கள், பெண்கள் பங்கேற்பு கணிசமாக இருந்தது. தலித் மக்களின் உரிமைகளுக்கான இத்த கைய எழுச்சிப் பேரணி சமீப காலங்களில் நடந்ததில்லை. தலித் மக்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் பேரணியில் இடம்பெற்றன. எழுப்பிய முழக்கங் கள் நியாயத்தையும், கோரிக்கைகளையும் மட்டுமல்ல, எழுச்சியையும் பறைசாற்றின. நிறைவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தோழர் பிரகாஷ் காரத் மற்றும் தலைவர்கள் ஆற்றிய உரை, உரிமைகளுக்கான போர்ப் பிரகடனமாக அமைந்தது. மொத்தத்தில் இம்மாநாடு சாதியமைப்பிற்கு சவால் விடும் திருப்புமுனை மாநாடாக அமைந்தது.

- பி.சம்பத்

1 comment:

  1. தீண்டாமை என்பது அன்றாடம் நிகழும் ஒரு நடப்பு மே மாதம் 31 , 2010 அன்றைக்குப்பிறகு தீண்டாமை எதுவுமே தங்கள் கண்களில் படவில்லையா? எல்லாவற்றையும் விட இந்த வலைத்தளம் மட்டுமே விரைவாகப்பதிவில் இருக்க வேண்டும். தங்களுக்கு ஏன் இந்த தயக்கம். உடைத்தெறியுங்கள் உங்கள் மௌனங்களை. பதிவு செய்திடுபங்கள் உங்கள் கள அனுபவங்களை அப்போது உங்களை உலகம் வியக்கும். போற்றும்.

    ReplyDelete